நவீனக் கலைவடிவங்கள் எழுந்து நாட்டுப்புறக் கலைகளை இல்லாமல் செய்துவிட்ட காலம் இது. கொடை விழாக்களில் மட்டுமேயிருந்த வில்லிசையை 2-கே கிட்ஸின் பிளேலிஸ்ட் வரை கொண்டு சேர்த்திருக்கிறார் இந்த ஆலங்குளத்து இளம் இசையரசி. வசீகரக் குரலோடும் தேர்ந்த உடல்மொழியோடும் இவர் பாடும் திருநெல்வேலி தெய்விகத் தமிழ், பார்ப்பவர்களின் மனதில் ஆழமாய் விழுகிறது. வில்லிசையை வெளியரங்கக் கொண்டாட்டமாக மாற்றியதில் மாதவிக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. 15 வயதில் மேடையேறி இந்த நான்காண்டுகளில் நானூறுக்கும் மேற்பட்ட மேடைகளில் பரிமளித்திருக்கிறார். அட்டகாளி பிறப்பு முதல் சுடலைமாடன் கதை வரை மாதவி சொல்கிற அத்தனை கதைகளுக்கும் யூடியூபில் லைக்ஸ் அள்ளி வழங்குகிறார்கள் நவீன இளைஞர்கள். தமிழ்க் கலையின் அடையாளமாக வளர்ந்து வந்திருக்கும் இந்தக் கலை தேவதையின் அடுத்த ஆறுமாதங்கள் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளால் நிறைந்திருக்கின்றன. பண்பாட்டின் தொடர்ச்சியான ஒரு மரபுக்கலையை அடுத்த தலைமுறையின் ரசனைக்கேற்ப கொண்டு சேர்க்கும் மாதவியை அள்ளக்குறையாத அன்போடு அங்கீகரிக்கிறது ஆனந்த விகடன்.